Friday, 25 April 2014

அல்சர் அவதிக்கு விடிவு..!


இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.


காரணங்கள்:

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.


அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.



சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.



சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.



தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.


கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

Tuesday, 8 April 2014



இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

Sunday, 6 April 2014



இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம் (Mono Unsaturated Fatty Acid) சுருக்கமாக - MUFA) 72% என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL(High-density lipoprotein ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது.

ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த

ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும்.தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

தினந்தோறும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு (28 கிராம்)ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் நல்லது. அன்றாட சமையலில் அனைத்துப் பதார்த்தங்கள் தயாரிக்கவும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். வதக்குவது, பொறிப்பது, தாளிப்பது, பூரி செய்வது போன்றவற்றுடன் இட்லிப் பொடியைக் குழைத்துச் சாப்பிடுவதற்கும் ஏற்றது.

Saturday, 5 April 2014



கத்தரிக்காய்

என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.

யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.



முருங்கைக்காய்

என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.

யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.



மாங்காய்

என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ

யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.



அவரைக்காய்

என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.



அத்திக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.



பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.



கோவைக்காய்

என்ன இருக்கு : விட்டமின் ஏ.

யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.

பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.



புடலங்காய்

என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.



பாகற்காய்

என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.

யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.

யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.



சுரைக்காய்

என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.

யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.

பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.



பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.


பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே.

 பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும்.

 அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.


அதிகமான கொழுப்பு உடம்பில் சேர்ந்துவிட்டதா? இதை குறைப்பதற்கான வழிகளை மேற்கொண்டுள்ளீர்களா?

இதனுடன் சேர்த்து உணவையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இந்த பகுதியில் பார்ப்போம். கொழுப்பை கரைக்கும் செயலில் உதவும் உணவுகள் கடைகளில் எளிதாக கிடைக்கின்றன.

14 முதல் படியாக உடல் எடையை குறைக்க உதவுவது ஓட்ஸ்.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரு கப் ஓட்ஸை காலை உணவாக சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் கலந்த பயிர் வகைகளை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் அத்துடன் வாழைப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் இரண்டு கிராமாக இருந்தால் பழங்களை சேர்த்தால் கூடுதல் அரை கிராம் ஆகிவிடும்.

தற்போதைய அறிவியல் கணிப்புகளின் படி ஏறத்தாழ ஒரு நாளைக்கு 15 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்தை சாப்பிட வேண்டும் என்றும், குறிப்பாக அதில் 10 முதல் 15 கிராம் கரையும் நார்ச்சத்து இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது.

Tuesday, 25 March 2014



பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா...

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்:-

அடிக்கடி சிறுநீர் :-

கழித்தல் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

அதீத தாகம் :-

சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

மங்கலான கண் பார்வை :-

அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.

எடை குறைதல் :-

இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.

சோர்வு சர்க்கரை :-

நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

கைகள் மரத்துப் போதல் :-

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள்:-

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும் இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.

சரும வறட்சி :-

புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.

பசி:-

எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும் நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.

வீக்கமடைந்த ஈறுகள்:-

கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்

பிரபலமான இடுகைகள்