Tuesday 25 March 2014



பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா...

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்:-

அடிக்கடி சிறுநீர் :-

கழித்தல் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

அதீத தாகம் :-

சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

மங்கலான கண் பார்வை :-

அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.

எடை குறைதல் :-

இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.

சோர்வு சர்க்கரை :-

நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

கைகள் மரத்துப் போதல் :-

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள்:-

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும் இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.

சரும வறட்சி :-

புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.

பசி:-

எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும் நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.

வீக்கமடைந்த ஈறுகள்:-

கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்


உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.

இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.

இவை அனைத்திற்கும் காரணம், இளம் வயதில் இருந்தே கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது தான். இவ்வாறு இளம் வயதில் சாப்பிட்ட கொழுப்புக்கள் உடலில் அப்படியே தங்கி, அதனால் உடல் பருமன் அடைவதோடு, இதய நோய்க்கும் ஆளாகின்றனர்.

ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.

அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும். இப்போது அப்படி, உடலில் கெட்ட கொழுப்புக்களை கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

பார்லி :

தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.

கத்திரிக்காய் :

கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.

மீன் :

மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.

நட்ஸ் :

நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :

அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

வெங்காயம் :

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஓட்ஸ் :

ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

முழு தானியங்கள் :

முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை :

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

சோயா பொருட்கள் :

சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.

பூண்டு :

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.

வெண்டைக்காய் :

கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

ரெட் ஒயின் :

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

சாக்லெட் :

சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.

பீன்ஸ் :

அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லா விட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

மிளகாய் :

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.

மார்கரைன் :

இது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.

அவகேடோ :

இதுவரை அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத் திருக்கிறோம்.

ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.


இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

* தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

* மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 அல்லது - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

* காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவுடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 லிருந்து- 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை, கால், பாதம் வீக்கம் குணமாகும்.

* ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி 50 கிராம் போட்டு சாறு சுண்டக் காய்ச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

* குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும். காது வலி இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.

* பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விஷம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில் கட்டவும் விஷம் இறங்கும்.

* குட்டநோய் -: நூறு ஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.

* முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

* இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.

* மகோதர வியாதிக்கு: கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச் சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

* ஆஸ்துமா குணமாக: கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

* சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

* தலைப்பொடுகு நீங்க: கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.

* பல் உறுதிக்கு!கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

* நாள்பட்ட புண் ஆற...கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.


கொழுத்தவனுக்கு கொள்ளு... இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும். புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்.

புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு உணவு மூலம் கிடைப்பது இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.கொள்ளின் பலன்கள் கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும்.

கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.

அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.

சூட்டைக் கிளப்புமா?

கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. எனவே அதை வைத்து உடனே மனிதர்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற மனநிலைக்கு வரவேண்டாம். தொடர்ந்து ஒருவர் கொள்ளு ஏதாவது ஒரு முறையில் சாப்பிட்டு வந்தால் அவருக்கு எந்தவித நோயும் வராது. எதிர்காலத்தில் உடலில் எந்த பிரச்னையும் ஏற்படாது.

எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?

கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.

கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும்,  கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.

வேர்க்கடலை கொழுப்பு அல்ல

வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.

முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு ரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது.

வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம்,

ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடுவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.

Monday 24 March 2014



பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத்  தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும், உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.


இது காரமும் மணமும் உடையது. உணவைச்  செரிக்க வைப்பது. விட்டு விட்டு வருகின்ற காய்ச்சலை  நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை  யனைத்தையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.


தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு  தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன்  தரும்.


 மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி  நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வாந்தி பேதி நிற்கும்.


பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை  இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் நன்கு கழுக  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி,  தணண்ணீர் சூடானதும் சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடம் மிட நல்ல பலன் கிடைக்கும்.


சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை முடி புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு  மூன்றையும் அரைத்து முடி புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும்,  மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும், சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.


உலர் திராட்சையின் மகிமைதினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் .


சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .


மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ் மிஸ்) அது.


 புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது,


மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்து கிறது,


 இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை,


இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி...


குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.

அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத்துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘கான்சர்ட்’ என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறுவனங்களின் பிஸ்கெட்டுகள் மற்றும் 25 நிறுவனங்கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ள கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 7 மாதங்களாக பிஸ்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குனர் சந்தனராஜன் கூறியதாவது:–

கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகளில் ரசாயன கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவதன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.

மாறாக உடலில் சத்துகள் உருவாகாது. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உணவுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கின்றன.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட்களாலும் 30 சதவீதம் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

‘‘எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன்’’ ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும்பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப் பட்டுள்ளது.

இனிப்பு வகை ஊறுகாய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த தகவலை இந்திய நுகர்வோர் சங்க தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.


முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல, அது ஆயுளையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முத்தத்தைப் பற்றிய ஆராய்ச்சிமுடிவுகள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதோ புதிய ஆய்வு முடிவு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்களேன்.


திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது.


இங்கிலாந்தில் இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது. இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.


அந்நாட்டில் திருமணமானவர்களில் 5ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை என்று கண்டறியப்பட்டது. அவர்கள் அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. (திருமணத்திற்கு முன்பு அதிகம் முத்தம் கொடுத்து போரடித்திருக்கும்)


முத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் நன்மை குறித்து தெரிவிக்கவும் பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்தின் இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது.


நம்ம ஊரில் பள்ளி மாணவர்கள் முத்தம் பற்றி பேசினாலே அடி பின்னிவிடுவார்கள். இங்கிலாந்தில் முத்தம் குறித்த பாடத்திட்டமே கொண்டுவரப்போகிறார்களாம். இது எப்படி இருக்கு.


இதய நாள் நோய்கள்(கரோனரி ஆர்டரி டீசீஸ்) பற்றிய தகவல்கள்:-

பிறவியில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும் இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்துக்கு இரத்தம் வழங்கும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதுண்டு.
பொதுமக்கள் பெரிதும் அஞ்சுகிற பரவலான நோய் இதய நாள நோயாகும் (கரோனரி ஆர்டரி டீசீஸ்). இந்த நாளங்கள் தான் இதயத்துக்கு இரத்தம் வழங்குகின்றன.

பொதுவாக இந்த இரத்த நாளங்களின் உள் பகுதியில் கொழுப்பு படிவங்கள் உருவாகிற காரணத்தால் இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டத்தை தடை செய்வதால் இந்த நோய் ஏற்படுகிறது. இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்ததால் போதுமான அளவு இரத்தம் ஓட்டம் ஏற்படாமல் போய்விடுகிறது.

அடுத்து ஆஞ்சினா பெக்டோரிஸ் அதாவது மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படுதல், இத்தகைய வலி சற்று ஓய்வு எடுத்தவுடன் போய்விடும். சில நேரங்களில் தாடை எலும்பு, கைகளுக்கும் பரவும். ஆஞ்சினா பெக்டோரிஸ் என்ற இந்த நோய், இரத்த நாளங்கள் மூலம் வழங்கப்படும் இரத்தத்தின் அளவு குறையும் நேரத்தில் ஏற்படும்.

அடுத்து நிலையற்ற ஆஞ்சினா என்ற மூச்சுத் திணறல் உணர்வு அல்லது மூச்சுத் திணறல் வலி, 4 வதாக மாரடைப்பு, 5 வதாக திடீரென ஏற்படும் மாரடைப்பால் ஏற்படும் இதய ஓட்டம் தடைபடுதல் மற்றும் மரணம்.

இந்த நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் புகை பிடித்தல், நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, பரம்பரையாக இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, மன அழுத்தம், மனக் கவலை சோர்வு, உடற் பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன், வயது போன்ற சிலவற்றை கூறலாம்.

ஈ. சி. ஜி. யில் காணப்படும் மாற்றங்கள், ஸ்டிரெஸ் டெஸ்ட், ஹோல்டர் (24 மணி நேர ஈ. சி. ஜி) எக்கோ கார்டியோகிராபி, சி. டி. ஆஞ்சியோ (64 சிலைஸ்) போன்ற சோதனைகள் மூலம் இந்த நோய்களை கண்டறியலாம்.

அஞ்சினா பெக்டோரிஸ்

பொதுவாக இந்தப் பாதிப்பு மார்பின் நடுப்பகுதி, வயிற்றின் மேல் பகுதி, கழுத்து, முதுகு, தாடை எலும்பு மற்றும் கைகளில் வலியை ஏற்படுத்தும். மார்பின் கீழ் பகுதி மற்றும் வயிற்றின் மேல்பகுதியில் சற்று அசெளகரியம் ஏற்பட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாலோ அல்லது தண்ணீர் குடித்தவுடனோ போய் விட்டால் இது வாய்வு உபத்திரவம் என்று தவறாக முடிவு எடுத்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள்.

சில நேரங்களில் இந்த அறிகுறிகளோடு வியர்வை, சோர்வு, தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்றவையும் ஏற்படக் கூடும். சிலருக்கு எந்த வலியோ, அசெளகரியமோ ஏற்படாமல் மூச்சுவிட சங்கடமோ அல்லது எரிச்சலோ மட்டும் ஏறபடக்கூடும்.

இத்தகைய அசெளகரியம், எரிச்சல், பாரமான உணர்வு, வலி, அதிக வியர்வை, தலைசுற்றல் போன்றவற்றால் மூச்சுவிட சங்கடம் போன்றவை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டு சற்று ஓய்வுக்குப் பிறகு, அல்லது உணவுக்குப் பிறகு போய்விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய, சிகிச்சை பெறவேண்டிய அவசர அவசிய நிலையாகும்.

மையோ கார்டியல் இன்பங்க்ஷன்

(மாரடைப்பு)
இதுவரையில் கூறப்பட்ட அறிகுறிகள் அரைமணி நேரத்துக்கு மேல் நீடித்தால் அது மாரடைப்பாக இருக்கக்கூடும். 30 சதவீத இத்தகைய நோயாளிகளுக்கு குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள 50 சதவீதம் பேருக்கு இதுபோன்ற அறிகுறிகளே இல்லாமல் சில நேரங்களில் பலவீனம், அதிக வியர்வை மட்டும் கொண்டு மாரடைப்பு ஏற்படக்கூடும்.

எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரிக்கு சென்று, எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ரத்த நாளங்களில் அடைப்புகள் அதிகமாக இருந்து இதய ஓட்டம் நின்றுவிட்டால் திடீர் மரணம் ஏற்படக் கூடும்.

ஏற்கனவே கூறப்பட்ட பரிசோதனைக ளோடு ‘கரோனரி ஆஞ்சியோகிராபி டிஜிட்டல்’ என்ற சோதனை தங்க தர சோதனை என்று அழைக்கப்படும் ஆஞ்சியோ சோதனையாகும். இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகும்.

இதய நோயை முற்றிலுமாக குணமாக்கிவிட முடியாது. பிரதானமான மற்றும் முக்கியமான சிகிச்சை என்னவென்றால் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது தான்.

இத்தகைய நோய்களுக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. பெரும் பான்மையான நோயாளிகளுக்கு மருந்துகளே நீண்ட காலத்துக்கு நல்ல பலனை தரும்.

இந்த நாளங்களில் ஒன்று அல்லது 2 கடுமையான அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அதை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ரத்த குழாய்கள் சுருங்காமல் இருக்க ஸ்டென்ட் என்று சொல்லப்படும் சிறிய டியூப்பை டாக்டர்கள் பொருத்தி விடுவார்கள்.

இது நல்ல பலனை தருகிறது. இதுதவிர இருதய ஆபரேஷன் அதாவது சிஏபிஜி ஆபரேஷன் செய்து கொள்ளாம். இது நீண்ட காலத்துக்கு மிக சிறப்பான பலனை தரும். இதன் மூலம் மரண அபாயம் மற்றும் பல சிக்கல்கள் நீக்கப்படுகின்றன.

தடுக்கும் வழிகள் :

இந்த நோய் வராமல் தடுப்பது நமது கையில்தான் இருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதய நோய்க்கான மருந்துகள் சாப்பிடுபவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டு ஸ்டென்ட் பொருத்தி இருப்பவர்கள், இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள ‘ரிqனிu.

இந்த நோய் இல்லாதவர்கள், நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களும் இந்த நோய் தங்களுக்கு வந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியும். புகை பிடிக்காமல் இருப்பது, உடல் பருமன் இல்லாமல் பார்த்து கொள்வது இரத்தக் கொதிப்பு, நீரிழிவு அதிக கொழுப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி யால் மட்டுமே முடியும். சிலருக்கு இந்த நோய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். இத்தகையவர்கள் உடனடியாக புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். ரத்தக் கொதிப்பு, நீரிழிவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும்.

உணவு முறை

நமது உணவு வகைகள் நிச்சயமாக இதய நோய்களைத் தடுக்க பெரும் உதவிகரமாக இருக்கும். குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள், அதிக அளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் இதய சிகிச்சை டாக்டர், உணவு வகை நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப நமது உணவு வகைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான வழிமுறை என்னவென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு எண்ணையை அது எந்த எண்ணையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். எண்ணையை பயன்படுத்தி சமைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ரிபைன்டு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். பழ வகைகள், காய்கறிகள் சாப்பிடும் அளவை அதிகரிக்க வேண்டும்.

உடற் பயிற்சி

நடைப் பயிற்சி தான் உடற் பயிற்சியில் மிக சிறந்ததாகும். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்தது. தினமும் காலையிலோ, மதியமோ, மாலையிலோ வெறும் வயிற்றில் இடைவிடாமல் 30 முதல் 45 நிமிடங்கள் வாரத்துக்கு குறைந்தது 5 நாட்களாவது நடக்க வேண்டும்.

இதய நோயாளிகள் தங்கள் உடற் பயிற்சி முறையை டாக்டரின் ஆலோசனை பெற்று வகுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும், டாக்டர் பரிந்துரை செய்தால் இதய நாள நோயாளிகள் யோகா செய்வதும் பலன் அளிக்கும்.
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!



வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.


கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சு பழம், நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது. அவற்றில் சில.....

1. கண்கள் "ப்ளிச்" ஆக சில குறிப்புகள் இதோ.....

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

2. ஜொலி ஜொலிக்க...

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா - இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.

இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

3. வடுக்கள் நீங்க...

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்?

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

4. கருமையை விரட்டியடிக்க....

சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...

1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

5. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை...

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள்.

அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

6. ஆரஞ்சு ஃப்ருட் பேக்...

வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக்.

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.


இயற்கை மருத்துவ குணம் நிறைந்த தாமரை தண்டு

தாமரை பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் தாவரம்.

தாமரை விதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் கூட முளைக்கும் தன்மை உடையவை.

 தாமரை தண்டில் மா சத்து, புரதம், கனியுப்புகள் அதோடு வேதிய பொருட்களும் காணப்படுகின்றதாம்.

தாமரை தண்டு நீரினுள் இருப்பதனால் குளிர்மையானதாக இருக்கும்.

இதை சீனர்கள் தமது ஆயுள் காலத்தினை அதிகரிக்கும் காய்கறிகளில் இதுவே மிக அதிகமாக செல்வாக்கு செலுத்துவதாக நம்புகின்றனர்.

இதனால், இவர்கள் தாமரை தண்டை பல வகையாக சமைத்து உண்ணுவார்கள்.

 ஆய்வாளர்களும் இது பல விதமான நோய்களிலிருந்து காத்து ஆயுளை அதிகரிக்க செய்கிறது என கூறுகின்றனர்.

வெள்ளை பூண்டு, இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை கலந்து எண்ணையில் பொறித்து தாமரை தண்டை சாப்பிடலாம்.


இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரிபழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ். இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது.

ஆன்தோசயனின் கிளைகோசிட் எனும் நிறமிசெர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. உடலில் சைக்ளோஆக்சிஜனேஸ் 1, சைக்ளோஆக்சிஜனேஸ் 2 போன்ற நொதிகள் செய்யும் வேலையை ஆன்தோசயானின் நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் பணிகளில் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை.

கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். புற்றுநோளிணி, உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. மெலடானின் எனும் சிறந்த நோளிணி எதிர்ப் பொருள் செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.

இதுபோன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப்படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோளிணித் தடுப்புபணியை செய்கிறது. பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.

வயது மூப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் அசெரோலாவகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரிபழங்களைவிட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏமிகுதியாகக் கொண்டது. 100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் வைட்டமின் சியும், குறிப்பிட்ட அளவில் வைட்டமின ஏ யும் உள்ளது.


பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer அண்டவிடாமல் பாதுகாக்கிறது முலாம் பழம்.

முலாம் பழம் கோடை காலத்தில் மிக எளி தாக கிடைக்கக் கூடியது. இது அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ள ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.

முலாம் பழத்தில் fibre என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளதால் மலசிக்கலை போக்குகிறது.

இதில் பொட்டாசியம் உள்ளதால் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இதய நோய், புற்று நோய் வராமல்பாதுகாக்கிறது. மிக முக்கியமாக Stroke எனப்படும் பக்கவாதத்தை வராமல் பாதுகாக்கிறது.

இது நீர்ப்பழம் என்பதால் இதை உண்பதால் உடம்பின் உஷ்ணத்தைகுறைக்கிறது.

அல்சர், சிறுநீர் சம்பந்தமான நோய், உணவு செரிப்புதன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் போக்குறதர்க்கும் இது உபயோகமாகிறது.

இதில் Folic Acid உள்ளதால் கர்ப்பமான பெண்கள் சாப்பிட வேண்டியஅருமருந்து இது.

இந்த பழம் கிட்னியில் உள்ள கல்லை கரைக்கக்கூடியது. மேலும் முதுமைகாலத்தில் ஏற்ப்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் Cervical Cancer மற்றும் osteoporosis எனப்படும் நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கிறது.

இந்த பழத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதோடு அழகும் மேம்படும். இதில் அதிகமாக வைட்டமின் ஏ மற்றும்வைட்டமின் சி உள்ளதால் சருமம் ஆரோக்யமாகவும், தோல் மினு மினுப்புகூடும்.

இப்பழத்தில் புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், வைட்டமின் "ஏ', "சி' என்று பலவிதச் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. முலாம்பழத்தைக் கரைத்து அதில் மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து லேசாய் உப்பு கலந்து குடித்தால் வயிறு சுத்தமாகிவிடும்.

உடல் சோம்பலை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உடல் எடை குறைக்க இது உதவுகிறது

முலாம் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்:

முலாம் பழம் (நறுக்கியது) – ஒரு கப்,
தேன் – 3 டீஸ்பூன்,
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

• முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், தேன், ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.


மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.


கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக, சில டிப்ஸ்…

*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.


உப்பு பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன?

உப்பிட்டவரை உள்ளளவும் நினை...’
‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...’

இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு நம்மிடம். அர்த்தமற்ற விஷயங்களைக் குறிப்பிடும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி! உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதைவிட அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னை போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வியர்வையும், அதன் மூலம் வெளியேறும் உப்புச்சத்தும் அதிகமிருக்கும் என்பதால், அந்த அளவு உப்பு தேவைப்படுகிறது. அதுவே குளிர் பிரதேசங்களில் வாழ்கிறவர்களுக்கு, வியர்வை அதிகமிருக்காது, உப்பின் இழப்பும் அதிகமிருக்காது என்பதால் குறைந்த அளவு உப்பே போதுமானது. உப்பு என்பது நமது ரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. அதனால், அதன் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எலக்ட்ரோலைட் பேலன்ஸ் எனப்படுகிற நமது உடலின் நீர்ச்சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக்கொண்டு, கழிவுகளை வெளியேற்றும் வேலையை திசுக்கள் செய்கின்றன. அந்தத் திசுக்களின் இயக்கத்தை சரியாகப் பராமரிக்க பொட்டாசியம் மற்றும் சோடியம் என்கிற இரு உப்புகளுமே தேவை. இந்த இரண்டின் அளவும் சரியாக இல்லாவிட்டால் பிரச்னைகளை சந்திக்கத் தயாராகிறது உடல்.

கூடினாலும் பிரச்னை... குறைந்தாலும் பிரச்னை...

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் கூடும். இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும். உடல் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும். தொடர்ந்து அதிக உப்புள்ள உணவையே உட்கொள்கிறவர்களுக்கு, அதன் விளைவாக, சிறுநீரகக் கோளாறுகளும் வரலாம். உப்பு குறைவதால், லோ பிபி எனப்படுகிற குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை வரும். தசைகள் பலமிழக்கும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.

யாருக்கு எவ்வளவு உப்பு?

சாதாரண நபர்களுக்கு ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிராம். இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு 2 முதல் 5 கிராம் மட்டுமே அனுமதி. சோடியமும் பொட்டாசியமும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன. உப்புக் கழிவானது சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியே வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை உப்பு வெளியேறினால், அது நார்மல். அதைவிட அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்னையின் அறிகுறி. அதனால்தான் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருத்துவரை அணுகும்போது, உப்பின் அளவை சரிபார்க்கச் சொல்கிறார்கள். -பருமன் ஆனவர்களும், ஹார்மோன் அளவு சரியில்லாதவர்களும் உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்...

ஊறுகாய், சிப்ஸ், வற்றல், வடாம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள்... இவற்றில் எல்லாம் உப்பின் அளவு தேவையைவிட அதிகமாகவே சேர்க்கப்படுவதால் தவிர்ப்பது சிறந்தது. இந்த உணவுகளில் எந்த அளவுக்குச் சுவை அதிகமாக இருக்குமோ, அதே அளவுக்கு அவற்றில் சேர்க்கப்படுகிற உப்பின் விளைவால் உண்டாகக் கூடிய பாதிப்புகளும் அதிகம்.

அயோடைஸ்ட் உப்பு நல்லதா?

கல் உப்பு, டேபிள் சால்ட் என எல்லாம் இன்று அயோடைஸ்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. அயோடின் என்பது ஒரு வகையான தாது உப்பு. அது அதிகமானால் முன் கழுத்துக் கழலை என்கிற பாதிப்பு வரும். கடலோரப் பகுதிகளில் வசிக்கிற நம்மைப் போன்ற மக்களுக்கு அயோடின் சத்தானது காற்றிலேயே கலந்திருப்பதால், தனியே எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஊர்களில் வசிக்கிறவர்களுக்கு அயோடைஸ்ட் உப்பு தேவைப்படும்.

 அதனால் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, அயோடைஸ்ட் உப்பைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்த வேண்டும். சாதாரண பழுப்பு நிற உப்பே ஆரோக்கியமானது. சமையலுக்கும் கூடிய வரை கல் உப்பையே பயன்படுத்தவும். டேபிள் சால்ட் தேவைப்படுகிற சமையலுக்கும், கல் உப்பை மிக்சியில் பொடித்துச் சேர்ப்பதே நல்லது.

எந்த உணவில் எவ்வளவு உப்பு?
(ஒவ்வொரு 100 கிராமிலும்)

தானியங்கள் - 4 முதல் 18 மி.கி.

பருப்பு வகைகள் - 20 முதல் 95 மி.கி.

உப்பு சேர்த்த வேர்க்கடலை - 16 முதல் 41 மி.கி.

பால் மற்றும் பால் பொருள்கள் - 50 மி.கி.

(பசும்பாலில் உப்பு சற்று அதிகம். உப்பு சேர்த்த வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட
சீஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதால் அவற்றையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.)
அசைவ உணவுகளில் முட்டை, மாமிசம், மீன் போன்றவற்றில் உப்பு உண்டு.

பன்றிக்கறியிலும், கருவாட்டிலும் அதிகளவில் இருப்பதால், உப்பின் தேவை அதிகமிருப்போருக்கு மட்டுமே இவற்றைக் கொடுக்க வேண்டும்.

காய்கறிகள் - 4 முதல் 71 மி.கி.

பழங்கள் - 1 முதல் 3 மி.கி.

காய்கறி மற்றும் பழங்களில் சோடியத்தின் அளவு குறைவுதான். ஆனாலும், காய்கறி மற்றும் கீரைகளில் பொட்டாசியம் சத்து மிக அதிகம்.

இளநீரிலும் பொட்டாசியம் அதிகமுண்டு. அதனால்தான் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, உடலிலுள்ள நீர்ச்சத்தெல்லாம் வற்றிப் போனவர்களுக்கு இளநீர் கொடுக்கச் சொல்கிறார்கள்.

இளநீர் குடித்ததும், அவர்கள் புத்துணர்வாகி, எழுந்து உட்கார்வதைப் பார்க்கலாம்.

அதே இளநீரை, சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்குக் கொடுத்தால், அவர்கள் உயிருக்கே ஆபத்தாகலாம். இரண்டுக்கும் ஒரே காரணம்தான்... உப்பு!


1. ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள்.

அவ்வப்போது ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் (மருத்துவர்கள் பரிந்துரைத்த) மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.



2. மது குடிக்காதீர்கள் - புகை பிடிக்காதீர்கள்.

புகைபிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையானது ரத்தக் குழாய் சுவற்றைத் தாக்குகிறது. ரத்தம் உறைதலை விரைவாக்குகிறது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் இதயம் அதிகமாகச் செயல்படும்படி தூண்டுகிறது. மது அருந்துவதும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.



3. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

சர்க்கரை நோயானது உடலின் எல்லா பகுதியிலும் உள்ள சின்ன ரத்தக் குழாய் முதல் பெரிய ரத்தக் குழாய் வரையிலும் பாதிக்கும். இது அடைப்பு மற்றும் ரத்தக் கசிவை ஏற்படுத்திவிடலாம்.



4. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்

உணவுப் பழக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள். சமச்சீரான உணவுக்குப் பழங்கள், சிறுதானிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரியுங்கள்.



5. தொடர் மருத்துவப் பரிசோதனை

பக்கவாதம் வருவதற்கான அபாயத்துக்கு உட்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளுங்கள்.
நார்த்தங்காய்..


வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌யநறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரது‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம்.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌மவ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌லஉடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌மத‌ணி‌க்கு‌ம்.

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைள நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம்.

பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ண்ணா‌ல் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

Sunday 23 March 2014



கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

அதிக எடை போடாமல் இருக்க உதவுவது.

பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள்.

 வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.

சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

 காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது.

பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம்.

 காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.


கிவி பழம் உடல் நலத்திற்கு நல்லது மிகவும் ஆனால் என்ன கொஞ்சம் விலை தான் அதிகம் நாம் அன்றாடம் வீண் செலவுகள் எவளவு செய்கிறோம் அதில் வீண் செலவுகளை கொஞ்சம் குறைத்து விட்டு இந்த மாதிரியான உடம்பிற்கு பயனளிக்க கூடிய அவற்றை சாபிட்டால் நம் உடல் நலத்திற்கு நல்லவைகையாக அமையும் .

மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்தக் கனிக்கு ‘கிவி’ (KIWI) என்ற சிறப்புப் பெயர் உண்டு. பொதுவாக உலகில் நியூசிலாந்து நாட்டு மக்களை ‘க்விஸ்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதன் காரணமாகத்தான் இந்தக் கனிக்கு உலகில் ‘கிவி’ என்ற பெயர் ஏற்பட்டது.

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்தக் கனியானது சீன நாட்டில் பயிரிடப்படுவதால், இந்தக் கனியை, உலகிலுள்ள மக்கள் பொதுவாக ‘சீனத்து நெல்லிக்கனி’ (Chinese Gooseberry) என்றும் அழைக்கிறார்கள். தற்பொழுது இத்தகைய கனியானது, நியூஸிலாந்து, இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தக் கனியின் மருத்துவப் பண்புகள்:

உலகெங்கும் பல்வகையான நாடுகளில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த ‘மருத்துவப் பெட்டகம்’ என போற்றுகின்றன.கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்.பொதுவாக விட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!

நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ‘ரேடிக்கிள்கள்’தான் பல்வகையான சிதைவு நோய்களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக்கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற்கையாக உள்ளது.முதுமைக் கால கண் நோய்களைத் தடுக் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பைத் தடுக்கின்றது:
மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு (Heart Attack) வழிவகுக்கின்றது. இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் ‘கிவி’ கனிக்கு இயற்கையாக உள்ளது.வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்:கிவி பழத்தில் ‘ஃபோலேவி(FOLATE) என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

நீரிழிவு நோயாளி உண்பதற்கு சிறந்த கனி:
ஏனென்றால், கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது.
உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த மருந்து!உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு கிவி கனியானது மிகவும் சிறந்த கனியாக கருதப்படுகின்றது. ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஒரு சாதாரண கனியில் சுமார் 3.8 கலோரிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், ஆரஞ்சில் 20.9 கலோரிகளும், வாழைப்பழத்தில் சுமார் 22.4 கலோரிகளும் மற்றும் ஆப்பிளிலும், பேரிக்காயிலும் சுமார் 32.8 கலோரிகளும் உள்ளன.உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் கனியை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.

மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும்:

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
பெண்கள் எளிதாக கருவுறுதலுக்கான வாய்ப்பை அளிக்கின்றது:
விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது.

ஆஸ்துமா நோயாளிக்கு மிகவும் சிறந்த உணவு:

சில மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகச் செயல்படுகின்றது. மேலும் நுரையீரல்கள் செயல்திறனை அதிகரிக்க இந்தக் கனி பயன்படுகின்றது.
பல்வகையான சத்துக்கள் மிகுந்த கனிகளில் சிறந்த கனியாகக் கருதப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ரட்ஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளிடம், கிவியின் ‘சத்து அடர்வு நிலை’ பற்றி விரிவான ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டபொழுது, இவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். இத்தகைய ஆய்வு முடிவை இவர்கள் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் The Journal of American College of Nutrition என்ற உணவியல் இதழில் விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கிய தகவல்கள்:

உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர கிவி என்ற கனியில் பொதிந்துள்ளது என குறிப்பிடுகின்றார்கள்.உணவியல் குறியீட்டில் கனிவகைகளில் அதிக எண்ணை உடைய கனியாக கிவி கருதப்படுகின்றது.

உணவியல் வல்லுநர்கள் கனிகள் வகைகளில் கிவி கனிக்கு உணவியல் குறியீடு எண்ணாக அதிக அளவு சத்துக்கள் நிறைந்த கனி என்பதால், இதற்கு 16 என்ற எண்ணை வழங்கியுள்ளார்கள். இது முதல் இடமாகும். இதற்கு அடுத்தபடியாக உணவுக் குறியீடு உள்ள கனியான பப்பாளிக்கு 14 அளித்துள்ளார்கள். மெலன் என்ற தர்பூசணிக்கு 13 என்ற குறியீடு எண்ணும், ஸ்ட்ரா பெர்ரிக்கு உணவுக் குறியீடு எண் 12-ம், மாங்கனிக்கு 12-ம், ஆரஞ்சு வகைகளுக்கு குறியீடு எண் 11-ம் வழங்கியுள்ளனர்.இத்தகைய கனியானதுஎவ்வகையான பருவங்களில் கிடைக்கின்றன?
இக்கனிக்கு சிறந்த பருவம் ஜூன் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை சிறந்த பருவமாகக் கருதப்படுகின்றது.

இத்தகைய கனிகளில் எத்தனை வகைகள் உள்ளன?

கிவி கனியில் மூன்று வகைகள் உள்ளன. 1. பச்சை நிற கிவி பழங்கள். 2. தங்க நிற கிவி பழங்கள். 3. சிவப்பு நிற கிவி பழங்கள். முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்டது பச்சை நிறத்தில் உள்ள வகைதான். இத்தகைய வகைதான் கடந்த 10 ஆண்டுகளாக அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் அகப்பகுதியானது பச்சையாக இருக்கும்; வெளித் தோலானது சற்று பழுப்பு நிறமாகக் காணப்படும். ஒவ்வொரு கனியும் சுமார் 50 முதல் 60 கிராம் அளவு இருக்கும்.

அண்மைக் காலங்களில் தங்க நிற கிவி பழம் என்ற புதிய வகை இறக்குமதி செய்யப்படுகின்றது. இதன் சதைப் பகுதியானது மஞ்சள் வண்ணத்தில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயராகும். இந்த வகையாவது, பச்சை வகையை விட அதிக சுவையாக இருக்கும்.

மேலை நாடுகளில் அண்மையில் கிவியில், சிவப்பு வகை என்ற கிவி பழம் விற்பனையில் உள்ளது. கிவி நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ளன..


முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.


தொண்டை வலி குணமடையும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்

மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.



பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி நரைத்தல் பிரச்னையும் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-

உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முதிர்வு பிரச்னை ஏற்படுகிறது.

வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்:

முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்பின்மை, அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுக்கும் பிரச்னை, நினைவுத் திறன் தடைப்படுதல், புரிந்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.

தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

அதிகாலையில் விழித்தல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தலை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். முகம் மிருதுத்தன்மை பெறுவதற்கும், எண்ணெய் வடிதல் மற்றும் அழுக்கு சேர்தலை தவிர்க்கவும், எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். தலை, காது மற்றும் பாதங்களில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம், குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தலை தடுக்கிறது.

உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் நடுநிலையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கோதுமை, கறுப்பு கொள்ளு, தேங்காய், வேர்க் கடலை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, சருமத்தில் ஈரத் தன்மையை தக்க வைத்து, சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது. பசு நெய், தசை மற்றும் சருமத்திற்கு நல்லது.

இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின், தூங்கச் செல்ல வேண்டும். நள்ளிரவுக்கு பின் தூங்கச் செல்வதால், கண்களுக்கு கீழே கரு வளையம், வீக்கம் உண்டாகிறது. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

சருமம் ஈரத் தன்மையுடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், எண்ணெய் மிகுந்த, காரமான, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி ஒன்றரை மணி நேரம், வேகமாக நடப்பது அவசியம்; இதனால், வியர்வை வெளியேறி நச்சுப் பொருள் நீக்கப்படுகின்றன.

நெல்லிக்காய், எலும்பு, தசை மற்றும் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, மூன்று வகையான தோஷ காரணிகளை நடுநிலையுடன் வைத்து, உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக் கிறது. பழங்கள் சாப்பிடுவதும் பலன் அளிக்கும்.

காய்ச்சாத பசும் பாலுடன், ஜாதிக்காய் பவுடர் சேர்த்து, களிம்பு போல செய்து, கண்களுக்கு கீழே தடவி, காய்ந்தவுடன் கழுவினால், கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் நீங்குவதுடன், முகம் வறண்டு போவதையும் தடுக்கலாம்.

தயிருடன், சுத்தமான மா இலை சேர்த்து, களிம்பாக செய்து முகத்தில் பூசுவதால், கறுப்பு கோடு, முகப்பரு தழும்பு நீங்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால், அவை முகத்திலுள்ள நுண் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.


அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.
 
முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.


  • உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
  • கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
  • கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
  • உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்


இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

குளியல் பொடி

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்

சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்
   
ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

பெண்களின் வயிற்று சதை குறைய

நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.


பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என் று நினைக்க வேண்டாம்.

எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற் கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்தா ன். அது என்னவெ ன்று பார்ப்போமா!!!

வேப்பங்குச்சி

இது ஒரு பழங்கால முறை. இன் றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்ப ங்குச்சியைப் பயன்படுத்திதான் தங்க ள் பற்களை துலக்குகின்றனர். அத னால் தான், அவர்கள் பற்கள் இன்று ம் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது.

மேலும் இத னைக் கொண்டு பற்களை துலக்கி னால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச் சென்று, துர் நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராம லும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துல க்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன்ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.

உப்பு

உப்பைக் கொண்டும் பற்களை துலக்க லாம். ஏனெனில் இதில் சோடியம் அதிக ம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற் களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்க லாம். மேலும் இது வாய்துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமு ம் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துல க்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை வைத்து பற்களைதுலக்கினா ல், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இது வும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறி து உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமி ன் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகையஅழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டு ம். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியு டன் இருக்கும்.

கிராம்பு

கிராம்பில் நிறைய மருத்துவ குணங் கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிரா ம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆக வே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனா ல் பற்கள் வெள்ளையாக இருப்பதோ டு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அத னை சரி செய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட் களையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்.



இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையே சித்த மருத்துவ சிகிச்சை. பண்டைய சித்தர்கள் உருவாக்கிய இந்த அருமருந்து தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அவதிப்படுவது மூட்டு வலியால் தான்.

மூட்டு வலி வந்தால் குணப்படுத்துவது கடினம் என்பதே பலரும் கூறும் கருத்து. அந்த மூட்டு வலிக்கு அற்புத மருந்து சித்த மருத்துவத்தில் இருப்பதாக கூறுகிறார் டாக்டர் குணசிங் வேதநாயகம். சித்தர்கள் இதற்காக அக, புற மருந்துகள் ஏராளம் சொல்லி வைத்துள்ளார்கள்.

நடக்க முடியாமல் கடும் வலியால் துன்பபடுவோருக்கும், அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்ய வேண்டும் என்ற நிலையில் இருப்போருக்கும், எலும்பு மூட்டுகள் விலகி இடம்பெயர்ந்து விகாரமாக தோன்றுவோருக்கும் சித்த மருத்துவத்தில் சக்தி வாய்ந்த மூலிகைகளால் தயாரிக்கப்படும் கசாயம், நெய், ரசாயனம், லேகியம், பற்பம், செந்தூரம், தைலம், பூச்சு, ஒற்றடம் போன்ற பக்க விளைவற்ற மருந்துகளாலும், தொக்கணம் போன்ற பயிற்சிகளாலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சித்த மருத்துவப்படி 84 வகை வாதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மூட்டு வலிகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

குழந்தைகளை பாதிக்கும் மூட்டு வலி:-

ஜுரம், அடிபடுதல், காசநோய், அம்மை நோய் போன்ற நோய்கள் வந்த குழந்தைகளுக்கு இந்த மூட்டு வியாதி வரலாம். 16 வயதுக்கு குறைந்தவர்களை இவ்வியாதி தாக்குகிறது. ஒரு மூட்டு அல்லது பல மூட்டுகள் பாதிப்படையலாம்.

ஆரம்ப அறிகுறியாக குழந்தைகள் இரவு நேரத்தில் மூட்டு வலி ஏற்பட்டு கத்துவார்கள். நடக்க சிரமப்படுவார்கள். இந்த வியாதியை சரியான முறையில் கண்டறிந்து குணப்படுத்தா விட்டால் மூட்டுகள் அழிந்து அதன் வலுவையும், செயலையும் இழக்க கூடும். எனவே நோயை சரியான முறையில் நிர்ணயம் செய்து மருத்துவம் புரிய வேண்டும்.

ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்:-

இந்த வாதம் 20 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு வரக்கூடியதாகும். இதில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இதன் அறிகுறிகளாக அதிகாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக காணப்படும்.

முதலில் கை, கால்களில், விரல் மூட்டுகளில் ஆரம்பித்து அதற்கு மேற்பட்ட மூட்டுகளை பாதிப்படைய செய்கின்றன. ரத்தத்தில் ஆர்ஏஎப் சோதனை மூலம் நோய் நிர்ணயமாகி இருப்பதை அறிந்து கொள்ளலாம். பொதுவாக இது பரம்பரையாகவும், அடிபடுவதாலும், மன உளைச்சலாலும் கூட வரலாம்.

மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்கள் இவற்றிலும் பாதிப்பு உண்டாக கூடும். இவ்வாதத்தில் முக்கிய அறிகுறியாக மூட்டுகளில் சிறு, சிறு கட்டிகள் உண்டாகி மூட்டுகளின் அசைவற்ற தன்மைக்கு ஒரு காரணமாகிறது.

மூட்டுகளின் அமைப்பு மாறி வாத்து கழுத்து போல் ஆகும். கட்டை விரல் `இசட்' வடிவில் ஆகும். இது ஒரு கொடிய வியாதி. இதற்கு முறையான மருந்துகள் நீண்டநாள் எடுக்க வேண்டும். அப்போது தான் கட்டுப்படுத்த முடியும்.

பெரியவர்களை பாதிக்கும் மூட்டு வலி:-

பெரியவர்களை பாதிக்கின்ற மூட்டு வலியை தேய்வு வாதம் என்றும் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் என்று அழைக்கிறோம். பொதுவாக 55 முதல் 70 வயதுள்ளவர்களை பாதிக்க கூடிய இந்நோய் தற்போது 35 வயதுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது.

இந்த வாதம் அடிபட்டதினால், எலும்பு முறிவினால், ஹார்மோன் கோளாறுகளினால், அதிக நடையால், அதிக எடையால் வரக்கூடும். சில பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்திலும் பாதிக்கப்படுகிறார்கள்.

மூட்டுப்பகுதி வெளிப்புறமாக வளைந்து நடக்க முடியாமல் வலியால் துடிப்பது நோயின் முற்றிய நிலை ஆகும். பரிசோதனைகளால் நோய் நிர்ணயிக்கப்பட்டு தகுந்த ஓய்வுடன் கூடிய மருந்துகள் கொடுத்து இந்த வியாதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். இளவயதினர் பூரணமாக சுகம் பெறுவர்.

சோரியாட்டிக் ஆர்த் ரைடிஸ்:-

காளாஞ்சக படை என்ற தோலில் உண்டாகும் செதில் உதிர்வு நோய் வந்தவர்கள் முறையான சிகிச்சை பெறாமல், பராமரிக்காமல் இருந்தால் கை, கால் மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட்டு அசைக்க முடியாமலும், எலும்பு தோற்றத்தில் நெளிந்தும் குறுகியும், விகாரமாக தோன்றும். நகக்கண் நிறம் மாறியும், சதை துருத்தியும் காணப்படும்.

சோரியாஸ் வந்தவர்கள் அதற்கு முறையான சிகிச்சை செய்யாத போது இந்த கொடிய வியாதியின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். ஆகவே இதற்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் நல்ல சுகம் பெற முடியும்.

முடக்குவாதம்:-

மூட்டு எலும்புகளின் உள்ளேயும், வெளியேயும் யூரிக் அமிலத்தின் படிமங்கள் படிவதின் காரணமாக முடக்குவாதம் ஏற்படுகிறது. தொடக்க நிலையில் இந்த வியாதி இரவு நேரங்களில் கால் பெருவிரல் வீக்கம் உண்டாகி சிவந்த பளப்பள தோற்றத்துடன் கடுமையான வலிகளுடன் ஏற்படுகிறது.

நாளடைவில் பிற மூட்டுக்களையும் பற்றி மூட்டுகள் செயல் இழந்த நிலையை ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்த வியாதி பியூரன்களால் இப்படி ஆகிறது. மனித உடலில் சராசரியாக 70 சதவீதம் யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறுகிறது.

இந்த அளவு குறைகின்றபோது இவ்வியாதி வர வாய்ப்பாகிறது. இவ்வியாதி பெண்களை விட ஆண் களுக்கே அதிகமாக காணப்படுகிறது. எனவே மூத்திர நாளங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும், யூரிக் அமிலம் உடலில் தங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எளிய வழிமுறைகள்:

மூட்டு வலிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எளிய வழிமுறைகள்:-

1. இயற்கை உணவு முறை பழக்கவழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.

2. அதிக புளி, காரம், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

3. அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

4. மதுபானம், மாது, மாமிசத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது.

5. வாழைக்காய், உருளைக்கிழங்கு, முட்டை போன்ற வாயுவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6. குடிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீரையும், குளிப்பதற்கு வெது வெதுப்பான நீரையும் பயன்படுத்த வேண்டும்.

7. தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

8. நோயின் தன்மை அதிகமாய் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை கலந்து ஆலோசித்து மருத்துவம் செய்யவேண்டும். 

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்