Saturday, 1 November 2014


நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.,

எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

Monday, 14 July 2014


பெண்களின் மார்பின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு சரியான பிரா அணியவேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில் பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுவதோடு மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பிரா அணிவது இன்றைக்கு வெறும் பேஷனாகிமட்டுமே வருகிறது. 10ல் 8 பெண்கள் சரியான அளவில் பிரா அணிவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்களாம். ஒரு சர்வேயில் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.


ஆஸ்திரேலியாவின் மார்பக ஆய்வு நிறுவனம் மற்றும் விளையாட்டு மருத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தின. அதில், 88 சதவீத டீன் ஏஜ் பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான பிராக்களை அணிவதில்லை என்று தெரிய வந்ததாம். மேலும், 85 சதவீத பெண்களுக்கு எது தங்களுக்குப் பொருத்தமான பிரா என்ற விழிப்புணர்வு இல்லையாம்.

இதன் காரணமாக சிறு வயது முதலே சரியில்லாத, பொருத்தமற்ற பிராக்களையே இவர்கள் அணிகிறார்களாம். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் இளம் பெண்கள் மற்றும் 67 சதவீத வயதான பெண்கள், பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் எந்தவித அக்கறையம் காட்டுவதில்லையாம்.


பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும்.

எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில்லையாம், பொருத்தமற்ற பிராக்களையே பெரும்பாலான பெண்கள் அணிகிறார்கள் என்பதை இந்த கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.


பெண்கள் பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்களைச் சந்திக்கிறார்கள். தங்களது மார்பு அளவு என்ன என்பதை சரியான முறையில் அளவிட அவர்கள் தயங்குகிறார்கள் என்று இந்த கருத்துக் கணிப்பை நடத்திய குழுவில் இடம் பெற்றிருந்தவரான டாக்டர் டெய்ட்ரே மெக்கீ கூறுகையில், பிரா விற்பனை நிறுவனங்களில் உள்ள அளவு பார்ப்போரிடம் சென்று மார்பு அளவுகளை சரி பார்க்க பெண்கள் தயங்குகிறார்கள்.

இத்தனைக்கும் அளவு பார்ப்போர் பெண்களாகவே உள்ளன போதிலும், அவர்களிடம் தங்களது மார்பகங்களைக் காட்ட பெண்களுக்குத் தயக்கம் காணப்படுகிறது. மேலும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளுக்குச் சென்று பிராக்களைப் போட்டுப் பார்த்துக் கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதற்குப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.

இந்த விழிப்புணர்வு குறைபாடுக்கு பெண்களின் அம்மாக்கள்தான் முதல் காரணம். அவர்கள்தான் தங்களது மகள்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரா அணிய ஆரம்பிக்கும்போதே சொல்லித் தந்திருக்க வேண்டும். பிராக்கள் குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

 அம்மாக்கள் மட்டுமே மகள்களுக்கு இதை சொல்லித் தர சரியான நபர்கள். ஆனால் அவர்கள் செய்யத் தவறியதால்தான் பிள்ளைகள் பிராக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வளர காரணமாகி விடுகிறது.

பிராக்கள் வசதியானதாக, சரியாக இருக்க வேண்டும் என்பதை பலரும் உணரவில்லை.

மார்பகங்கள் ஆடாமல், அசையாமல் இருக்க மட்டுமே பிரா உதவுகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது. பல பெண்களுக்கு பிராக்கள் பெரும் சுமையாக தெரிவதாக கூறினர்.

 எப்படா வீட்டுக்குப் போவோம், பிராவை கழற்றிப் போடுவோம் என்றிருக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதற்குக் காரணம், அவர்கள் அணியும் பொருத்தமற்ற பிராக்கள்தான். சரியான பிராக்கள் அணிந்தால் இந்தப் பிரச்சினை அவர்களுக்கு நிச்சயம் வராது.

மார்பகம் பிராவுக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியான பிராவை அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம். அவுசகரியமாக உணர்ந்தால் நாம் சரியில்லாத பிராவைப் போட்டிருக்கிறோம் என்று உணர வேண்டும் என்றார் அவர்.

பெண்களுக்கு சரியான பிரா எது, உங்களின் பிராவை எப்படி சரியான முறையில் தேர்வு செய்யலாம், உங்களது மார்புக்கு ஏற்ற பிரா எது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைப் பெண்களுக்குக் கற்றுத் தரும் நடவடிக்கைகளை தற்போது இந்த இரு அமைப்புகளும் மேற்கொண்டுள்ளனவாம். 

Friday, 11 July 2014


கடைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இன்ஸ்டன்ட் உணவு சாப்பிட்ட மாணவர்கள் பெரும்பாலோனோர் இதயநோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


உடனடி உணவுகள்

சூப்பர்மார்க்கெட், மால்களில் உள்ள கடைகளில் பிரியாணி, சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம், சட்னி, சாம்பார் உள்ளிட்ட பலவகை உணவு வகையராக்கள் பாக்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வந்து சூடு படுத்தினால் போதும் பத்து நிமிடத்திற்குள் உணவு தயாராகிவிடும். இந்த உடனடி உணவுகளை அதிகம் வாங்குவது வேலைக்கு போகும் இல்லத்தரசிகளும், வெளியூர்களில் ரூம் எடுத்து வேலைபார்க்கும், படிப்பவர்களும்தான்.


வசீகரிக்கும் விளம்பரங்கள்

மளிகைச் சாமான்களால் நிரம்பியிருந்த பலரது வீடுகளில் இன்றைக்கு இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் நிரம்பியுள்ளன. இது தவறான செயல் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் என்ற வசீகர விளம்பரத்தில் மயங்கும் பெண்களும், இளம் தலைமுறையினரும் நேரமின்மையினால் இந்த உடனடி உணவுகளை வாங்கி ருசிக்கின்றனர். விளைவு சிறு வயதிலேயே மூளை பாதிப்பு, இதயநோய், புற்றுநோய் என பல பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்

உடனடி உணவுகளில் மறைந்திருக்கும் முதல் ஆபத்து கொழுப்பு. ‘டிரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லக் கூடிய இது, உணவுப்பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும். இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, அதன் விளைவாக இதய நோய்களுக்கு அஸ்திவாரம் போடும். குழந்தைப்பருவ பருமன், ஹைப்பர் டென்ஷன், மாரடைப்பு என பல நோய்களுக்கும் இது காரணமாகிறது என்று அதிர்ச்சியூட்டுகின்றனர் மருத்துவர்கள்.


சோடியம் உப்பு

உடனடி உணவுகளில் அதிக அளவு சோடியம் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறவங்களுக்கே இது ஆபத்தானது. ஏற்கனவே இதயக் கோளாறு இருக்கிறவங்க இந்த உணவுகளை சாப்பிடறப்ப, பிரச்னை இன்னும் தீவிரமாகும்.


நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தை சரிவிகிதத்துல வைக்கவும், தசைகள் சுருங்கி விரியவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் சோடியம் தேவை. ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது. அந்த அளவைத் தாண்டும்போது ரத்த அழுத்தம் எகிறும். உடனடி உணவுகள்ல உப்பு அதிகமா சேர்க்கப்பட்டிருப்பதால் உயர் ரத்த நோய் ஏற்படும் பாதிப்பு அதிகம்.

அதிக இனிப்பு பொருள்

பர்கர் பன், குளிர்பானங்கள், கெட்ச்சப் போன்ற பல உணவுகளில் இனிப்புச் சுவைக்காக சேர்க்கப்படற பிரதான பொருள் ‘ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்’. இது உணவுக்கு ஒருவித கவர்ச்சியான பிரவுன் நிறத்தையும் கொடுக்கக்கூடியது. இது, அதிகம் சாப்பிடத் தூண்டி, இதய நோய்களையும் நீரிழிவையும் வரவழைக்கக்கூடியது.
கெட்டுப்போகாமல் தடுப்பவை

உடனடி உணவுகள் கெடாமல் இருக்கவும், பாக்டீரியா வளராமல் இருக்கவும் சேர்க்கப்படும் ரசாயன பிரிசர்வேட்டிவ் ஆபத்தானது. உப்பு, சர்க்கரை, வினிகர் மாதிரியான இயற்கையான ப்ரிசர்வேட்டிவ்களால் பெரிய பாதிப்பு கிடையாது. ரசாயன பொருட்களான சோடியம் பென்ஸோயட்டுக்கு. ஊறுகாய், ஜூஸ் வகையறாக்களில் சேர்க்கப்படுவதால் இது அலர்ஜியை உருவாக்கி, மூளையையும் பாதிக்கலாம்.

அடுத்து உடனடியா சாப்பிடக் கூடிய அசைவ உணவுகளில் நைட்ரேட், நைட்ரைட்டஸ் சேர்க்கப்படுகிறது . இதனை தொடர்ந்து சாப்பிடும் போது வயிறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயை வரவழைக்கக்கூடிய அளவுக்கு இது மோசமானது. ஏற்கனவே அசைவ உணவுகள்ல உள்ள கொழுப்பு, அதைக் கெடாம வச்சிருக்கறதுக்காக சேர்க்கிற இன்னொரு கொழுப்புன்னு ரெண்டுமே கெடுதல்தான் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


அதிக கலோரி ஆபத்து

ரெடிமேட் உணவுகளில் கலோரி அதிகம் உள்ளது எனவே இவற்றை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை இன்ஸ்டன்ட் உணவுகளை எடுத்துக் கொண்டால் , மற்ற நேரங்களில் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், இதய நோய், உடல் பருமன் உள்ளவங்க இதைத் தொட்டுக்கூட பார்க்க வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கையாகும்

Thursday, 10 July 2014

விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். அக்காலத்தில் எல்லாம் அழகு பொருட்கள் என்ற ஒன்றும் இல்லை. அப்போது மக்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு பெரும்பாலும் எண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக கூந்தலை நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்ப்பதற்கு, தலைக்கு தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஆகவே அத்தகைய சிறப்பு வாய்ந்த விளக்கெண்ணெய், சற்று அடர்த்தியாக இருக்கும். மேலும் சருமத்தை கெமிக்கலால் செய்த அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு விளக்கெண்ணெயும் சரியான ஒன்றாக இருக்கும். சரி, விளக்கெண்ணெய் பயன்படுத்தினால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போமா!!!

ஹேர் கண்டிஷனர்.

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணெயை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.

கை மற்றும் நகப் பராமரிப்பு.

தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.

கிளின்சிங்.

விளக்கெண்ணெய் கொண்டும் சருமத்திற்கு கிளின்சிங் செய்யலாம். அதிலும் ,இதனை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்தின்றி காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும்.

குதிகால் வெடிப்புக்கள்.

குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் போய்விடும்.

சுருக்கங்கள்

சுருக்கங்களைப் போக்குவதற்கு விளக்கெண்ணெய் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.

கூந்தல் வளர்ச்சி.

பழங்காலத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். எனவே அத்தகைய எண்ணெயை வைத்து, வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் வளர்ச்சியுடன் அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.

மச்சம்.

விளக்கெண்ணெயில் சோடா உப்பு சேர்த்து கலந்து, மச்சம் உள்ள இடத்தில் தேய்த்து வர, திடீரென்று வந்த மச்சம் மறைய ஆரம்பிக்கும். இதனை தொடர்ந்து மச்சம் போகும் வரை செய்ய வேண்டும்.

மாய்ச்சுரைசர்.

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

ஸ்ட்ரெட்ச்.

மார்க் இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 10 நிமிடம் மசாஜ் செய்து, ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம்.

முதுமைத் தோற்றம்.

சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அத்தகையவர்கள், விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.

Thursday, 29 May 2014





உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.

சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

Friday, 25 April 2014

அல்சர் அவதிக்கு விடிவு..!


இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.


காரணங்கள்:

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.


அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.



சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.



சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.



தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.


கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

Tuesday, 8 April 2014



இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க...

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க...

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய....

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

பிரபலமான இடுகைகள்